பவானி: பவானி அருகே காதல் திருமணம் செய்துகொண்ட மூன்றே மாதத்தில் தம்பதி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
ஈரோடு மாவட்டம், பவானி அடுத்த ஆப்பக்கூடல், மல்லியூரைச் சேர்ந்தவர் சக்திவேல் மகன் இளங்கோ (23). நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அருகேயுள்ள தோக்கவாடியைச் சேர்ந்தவர் சித்தேஸ்வரன் மகள் ரம்யா (23). இருவரும் குமாரபாளையத்தில் உள்ள தனியார் கல்லூரியில் படிக்கும்போது இருவருக்குள்ளும் காதல் ஏற்பட்டது. இதையடுத்து, கடந்த 3 மாதங்களுக்கு முன் இருவரும் திருமணம் செய்து கொண்டு, மல்லியூரில் வசித்து வந்தனர்.
இந்நிலையில், திங்கள்கிழமை வழக்கம்போல் வேலைக்குச் சென்றுவிட்டு இளங்கோ மாலையில் வீடு திரும்பினார். வீட்டின் கதவை திறந்து பார்க்கையில் ரம்யா தூக்கிட்ட நிலையில் இறந்து கிடந்தார். இதனால், வேதனையடைந்த இளங்கோவும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதைக்கண்ட அப்பகுதியினர் ஆப்பக்கூடல் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்த காவலர்கள் இருவர் சடலத்தையும் கைப்பற்றி அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
காதலித்து திருமணம் செய்துகொண்ட மூன்றே மாதத்தில் இருவரும் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.