பாடகர் எஸ்.பி.பி.யின் உடல் தாமைரைப்பாக்கத்தில் உள்ள பண்ணை வீட்டுக்கு கொண்டு செல்லப்படுகிறது.
சுமார் 50 ஆண்டுகளாக திரையுலகில் 40,000-க்கும் மேற்பட்ட பாடல்களை பாடிய 'பாடும் நிலா' பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம், கரோனாவால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை பிற்பகல் அவர் உயிரிழந்தார். அவரது மறைவு திரைத்துறையினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
குடியரசுத் தலைவர், பிரதமர், அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் பலர் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர். இன்று மாலை 4 மணியளவில் எஸ்.பி.பி-யின் உடல் நுங்கம்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. நுங்கம்பாக்கம் இல்லத்தில் அவரது உடலுக்கு பிரபலங்கள், பொதுமக்கள், ரசிகர்கள் என திரளானோர் வந்து அஞ்சலி செலுத்தினர்.
இந்த நிலையில் பாடகர் எஸ்.பி.பி.யின் உடல் சென்னை நுங்கம்பாக்கம் இல்லத்தில் இருந்து தற்போது தாமைரைப்பாக்கத்தில் உள்ள பண்ணை வீட்டுக்கு கொண்டு செல்லப்படுகிறது. அங்கு எஸ்.பி.பி உடல் நாளை நல்லடக்கம் செய்யப்படுகிறது. மேலும் பண்ணை வீட்டில் எஸ்.பி.பி.யின் உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்த அனுமதி இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.