மதுரை திருமங்கலம் அருகேயுள்ள சொக்கநாதன்பட்டி கிராம மக்கள் தங்களுக்குப் பாதுகாப்பு வழங்கக் கோரி திருமங்கலம் காவல் நிலையத்தை வியாழக்கிழமை முற்றுகையிட்டனர்.
சொக்கநாதன்பட்டி புதூர் கிராமத்தில் 400க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்த கிராமத்துக்கு அருகே புளியங்குளம் கிராமம் உள்ளது புளியங்குளம் கிராமத்தைச் சேர்ந்த சிலர் மது அருந்திவிட்டு தங்களது கிராமத்திற்கு வந்து பெண்களையும் வயதானவர்களின் மிரட்டுவதாகவும் இதுகுறித்து தட்டிக்கேட்டால் மதுபோதையில் ஆயுதங்களைக் கொண்டு தங்களைத் தாக்க வருவதாகவும் பெண்களைக் கேலி செய்வதாகவும் பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.
இதுதொடர்பாக காவல் நிலையத்தில் பலமுறை தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காததால், வியாழக்கிழமை கிராம மக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் திருமங்கலம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். முற்றுகையிட்ட கிராம மக்களிடம் பேச்சு நடத்திய காவல்துறையினர் விரைவில் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்து பொதுமக்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.
திருமங்கலம் காவல் நிலையத்தை பொதுமக்கள் சுமார் அரை மணி நேரம் முற்றுகையிட்டதால் அப்பகுதி பரபரப்பாகக் காணப்பட்டது.