தமிழக அரசு கொண்டு வந்திருக்கும் தமிழ்நாடு நகர்ப்புற ஊரமைப்பு (திருத்தச்) சட்டம் 2020-க்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்கக்கூடாது என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நில உரிமையாளர்கள், கட்டட உரிமையாளர்களுக்குத் தெரியாமல் அவர்களுக்குச் சொந்த உரிமையுள்ள ஒரு பகுதியில் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க அனுமதி வழங்கத் தமிழ்நாடு நகர்ப்புற ஊரமைப்பு (திருத்தச்) சட்டம் 2020 கொண்டு வந்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்தச் சட்ட முன்வடிவு சட்டமன்றத்தில் முன் வைக்கப்பட்ட போதே, அதை எதிர்த்துப் பேசிய திமுகவின் கருத்துகளை தமிழக அரசு காது கொடுத்து கேட்கவே இல்லை என தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
பொதுமக்களின் கலந்தாய்வை ரத்து செய்யும் இந்தச் சட்டத்திருத்தம் சட்ட நெறிமுறைகளுக்கு முற்றிலும் எதிரானது எனக் குறிப்பிட்டுள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பொதுமக்களின் சொத்துரிமை மற்றும் நில உரிமையைப் பாதிக்கும் “தமிழ்நாடு நகர்ப்புற ஊரமைப்பு (திருத்தச்) சட்டம் 2020-க்கு” ஆளுநர் ஒப்புதல் அளிக்கக்கூடாது என்று வலியுறுத்தியுள்ளார்.