தமிழகத்தில் பள்ளிகளைத் திறப்பதற்கான சாத்தியம் இல்லை என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்.
ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையத்தில் செய்தியாளர்களுக்கு அமைச்சர் அளித்த பேட்டி: தமிழகத்தில் பள்ளிகளைத் திறப்பதற்கான சாத்தியம் இல்லை. நீட் தேர்வில் 180 கேள்விகளில் தமிழக அரசின் புதிய பாடத் திட்டத்தில் இருந்து 174 கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன. தனியார் பள்ளிகள் கல்விக் கட்டணத்தை முழுமையாகப் பெற்றுள்ளது குறித்து விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். அரசுப் பள்ளிகளில் இதுவரை 15.3 லட்சம் மாணவர்கள் சேர்க்கை நடைபெற்றுள்ளது. செப்டம்பர் இறுதி வரை மாணவர் சேர்க்கை நடைபெறும். 2.5 லட்சம் தனியார் பள்ளி மாணவர்கள் அரசுப் பள்ளியில் சேர்ந்துள்ளனர்.
தமிழகத்தில் புதிதாக 15 இடங்களில் தொடக்கப் பள்ளிகளும், 10 இடங்களில் உயர்நிலைப் பள்ளிகளும் துவங்கப்படும் என்றார்.