திருப்பூரில் பாஜக நிர்வாகி வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர், எஸ்ஏபி திரையரங்கம் பின்புறம் உள்ள பாரதிதாசன் நகரில் வசித்து வருபவர் கிருஷ்ணசாமி(42), இவர் பாஜக அனுப்பர்பாளையம் மண்டல வர்த்தக அணி துணைத் தலைவராகப் பொறுப்பு வகித்து வருகிறார். இவரது மனைவி மேனகாவும் அதே மண்டலத்தில் பொதுச் செயலாளராக உள்ளார்.
இந்த நிலையில், கிருஷ்ணசாமி தனது மகனின் பிறந்தநாளை ஒட்டி புதன்கிழமை பழனி கோயிலுக்குச் சென்றுள்ளார். இதன் பிறகு பிற்பகலில் வீடு திரும்பியபோது வீட்டின் முன்பகுதியில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து கிருஷ்ணசாமி அளித்த புகாரின் பேரில் அனுப்பர்பாளையம் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் காரணமாக அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.