வெள்ளக்கோவில்: திருப்பூர் மாவட்டம், வெள்ளக்கோவில் அருகே ஞாயிற்றுக்கிழமை ஒரு ஸ்பின்னிங் மில்லில் தீ விபத்து ஏற்பட்டது.
வெள்ளக்கோவில் - தாராபுரம் சாலை, நாகமநாயக்கன்பட்டி, தண்ணீர் பந்தலைச் சேர்ந்தவர் மணிவாசகம் (45). இவருக்குச் சொந்தமான ஸ்பின்னிங் மில் தீத்தாம்பாளையத்தில் உள்ளது. இங்கு பஞ்சுகள் வைக்கப்பட்டிருந்த பகுதியில் திடீரென தீப்பிடித்தது.
தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற வெள்ளக்கோவில் தீயணைப்பு நிலைய அலுவலர் சி.தனசேகரன், நிலைய போக்குவரத்து அலுவலர் வேலுச்சாமி உள்ளிட்ட தீயணைப்புப் படையினர் இரண்டு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். மின்சார கோளாறு காரணமாக தீப்பிடித்ததாக கூறப்படுகிறது.
இந்த விபத்தில் கட்டடத்தின் ஒரு பகுதி, பஞ்சு, சில இயந்திர பகுதிகள் தீயில் கருகி சேதமடைந்தன. வேலை செய்து கொண்டிருந்த தொழிலாளர்களுக்கு பாதிப்பு இல்லை என கூறப்படுகிறது.