சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ஒன்றியம் குவளைவேலி கிராமத்தின் பாசனக் கண்மாய் தூர்வாரி சீரமைக்கப்படாததால் தண்ணீர் வெளியேறும் மடைகள் மற்றும் தண்ணீர் வரத்துக் கால்வாய் சேதமடைந்துள்ளதால் இக்கண்மாயை சீரமைக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
மானாமதுரை ஒன்றியம் குவளைவேலி கண்மாய் மூலம் 2500 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. வைகையாற்றிலிருந்து இக்கண்மாய்க்கு தண்ணீர் வரும் கால்வாய் 9 கி.மீ தூரம் உள்ளது. கடந்த பல ஆண்டுகளாக குவளைவேலி கண்மாய் தூர்வாரி சீரமைக்கப்படாததால் கண்மாய் அழம் குறைந்து குறைந்த அளவு தண்ணீர் மட்டுமே தேக்க முடியும் என்ற நிலை உள்ளது.
இதுதவிர இக்கண்மாயிலிருந்து விவசாய நிலங்களுக்குத் தண்ணீர் பாய்ச்சப்படும் 6 மடைகளும் சேதமடைந்து கண்மாய்க்குத் தண்ணீர் வரும் காலங்களில் தண்ணீரைத் தேக்க முடியாமல் தண்ணீர் இந்த மடைகள் வழியாக வீணாக வெளியேறி வருவதாக கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.
தற்போது மானாமதுரை ஒன்றியத்தில் பல கண்மாய்கள் குடிமராமத்து திட்டத்தில் தூர்வாரி சீரமைக்கும் பணி நடந்து வருகிறது. ஆனால் குவளைவேலி கண்மாய் கண்டுகொள்ளப்படவில்லை என இக்கிராம மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் குவளைவேலி கண்மாயையும் குடிமராமத்து திட்டத்தில் சீரமைக்க வேண்டும் என இக்கண்மாய் மூலம் பாசன வசதி பெறும் விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்.