அதிமுக வளர்ச்சிப் பணிகள் குறித்து இன்றைய கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது என கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோர் விளக்கமளித்துள்ளனர்.
அடுத்த ஆண்டு தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சித் தலைமையகத்தில் அதிமுக உயர்மட்ட குழு ஆலோசனைக் கூட்டம் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று நடைபெற்றது. கூட்டத்தில் அமைச்சர்கள், தலைமை நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
சுமார் ஒன்றரை மணி நேரத்துக்கும் மேலாக நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் பல்வேறு விவகாரங்கள் குறித்து காரசார விவாதங்கள் நடைபெற்றதாக கூறப்படுகிறது. குறிப்பாக முதல்வர் வேட்பாளர் மற்றும் அதிமுக நிர்வாகிகள் நியமனம் குறித்து கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. எனினும், முதல்வர் வேட்பாளர் குறித்து எந்த முடிவும் எட்டப்படவில்லை எனத் தெரிகிறது.
இந்த நிலையில் இன்றைய கூட்டத்தில் அதிமுக வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது என கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோர் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர். மேலும் கூட்டத்தில் மூத்த நிர்வாகிகள், மூத்த அமைச்சர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர் என்றும் அதில் தெரிவித்துள்ளனர்.