திருப்பூர்: திருப்பூர் வீரபாண்டி அருகே உள்ள பள்ளத்தை தூர்வாரக்கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர் மாநகராட்சிக்கு உள்பட்ட வீரபாண்டி மாகாளியம்மன் கோவில் அருகே இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு 4 ஆவது மண்டல பொறுப்பாளர் சி.அருணாசலம் தலைமை வகித்தார்.
இதில், பங்கேற்றவர்கள் கூறியதாவது:
திருப்பூர் மாநகராட்சிக்கு உள்பட்ட வீரபாண்டி மாகாளியம்மன் கோயில்அருகே உள்ள சின்னப்பள்ளம் நீண்ட நாள்களாக தூர்வாரப்படாமல் உள்ளது. இதனால் தற்பொழுது பெய்து வரும் கன மழையால் நீர் வெளியேறமுடியாமல் தொழிற்சாலை மற்றும் குடியிருப்புகளுக்குள் புகுந்து வருகிறது. ஆகவே, உடனடியாக சின்னப்பள்ளதைதூர்வார மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும், ஆலங்காடு பகுதியில் கழிவுநீர் வடிகால் முறையாக சுத்தம் செய்து தண்ணீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 4 ஆவது மண்டல செயலாளர் ஆர்.வடிவேல், கிளை செயலாளர் விஜயகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.