மருத்துவக் கல்லூரிகளில், அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்க கால தாமதம் செய்யும் தமிழக ஆளுநரைக் கண்டித்தும், இதற்காக ஆளுநர் தமிழகத்தை விட்டு வெளியேற வேண்டும் என வலியுறுத்தியும், பட்டுக்கோட்டை தலைமை அஞ்சலகம் அருகில் எஸ்டிபிஐ கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்துக்கு எஸ்டிபிஐ கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்ட பொதுச்செயலர் எஸ்.ஜெ.சாகுல் ஹமீது தலைமை வகித்தார். மாநிலச் செயலர் ஏ.அபுபக்கர் சித்திக் கண்டன உரையாற்றினார்.
ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற மாவட்டத் தலைவர் முகமது புகாரி, மாவட்ட செயலர்கள் எம்.முகமது ரஹீஸ், எல்.முகமது அஸ்கர், மாவட்டப் பொருளாளர் முகமது இத்ரீஸ், கேம்பஸ் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் மாவட்டச் செயலர் நஜீப், பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் கோட்டத் தலைவர் அப்துல் ரகுமான் உள்ளிட்டோர் மருத்துவக் கல்லூரிகளில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்காமல் காலம் தாழ்த்தி வரும் ஆளுநரைக் கண்டித்தும், அவர் தமிழகத்தை விட்டு வெளியேற வலியுறுத்தியும் முழக்கமிட்டனர். இதைத் தொடர்ந்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 45 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.