ஆவடி டேங்க் பேக்டரி பகுதியில் கஞ்சா செடி வளர்த்து, விற்பனை செய்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் இருந்து 1.1 கிலோ கஞ்சா மற்றும் கஞ்சா செடிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
சென்னை பெருநகரில் “போதை தடுப்புக்கான நடவடிக்கை" மூலம் கஞ்சா மற்றும் போதை பொருள்கள் கடத்தி வருபவர்களையும், விற்பனை செய்பவர்களையும் கண்டறிந்து கைது செய்ய சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மகேஷ் குமார் அகர்வால் உத்தரவிட்டதன்பேரில், காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான காவல் குழுவினர் தீவிரமாக கண்காணித்து, கஞ்சா மற்றும் போதை பொருள்கள் விற்பனை செய்பவர்களை கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
மேலும் சென்னையில் முக்கிய இடங்கள் மற்றும் சந்திப்புகளில் வாகன தணிக்கை செய்யப்பட்டு போதை பொருள்கள் நடமாட்டத்தை முற்றிலும் தடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
இதன் தொடர்ச்சியாக, டி-7 ஆவடி டேங்க் பேக்டரி காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் நேற்று (28.10.2020) ஆவடி டேங்க் பேக்டரி, கோயில் பதாகை ஏரிக்கரை பகுதியில் கண்காணித்த போது, அங்கு ஒருவர் கஞ்சா பொட்டலங்களை பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.
அதன்பேரில், சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்த வெள்ளானூரைச் சேர்ந்த மணிகண்டனை கைது செய்தனர். மேலும் விசாரணையில் கைது செய்யப்பட்ட மணிகண்டன் கோயில்பதாகை ஏரிக்கரை பகுதியில் உள்ள புறம்போக்கு இடத்தில் கஞ்சா செடி வளர்த்து அதிலிருந்து கிடைக்கும் கஞ்சாவை சேகரித்து விற்பனை செய்தது தெரியவந்தது.
அதன் பேரில் காவல்துறையினர் சம்பவயிடத்திற்கு சென்று கஞ்சா செடியை பிடுங்கி அழித்தனர். மேலும் அவரிடமிருந்து விற்பனைக்காக வைத்திருந்த 1.1 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட மணிகண்டன் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படவுள்ளார்.