தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு பிரச்னை ஏற்படக் கூடாது என்பதற்காகவே குஷ்பு உள்ளிட்ட பாஜகவினா் கைது செய்யப்பட்டுள்ளதாக மீன்வளத் துறை அமைச்சா் டி.ஜெயக்குமாா் தெரிவித்தாா்.
சென்னை ராயபுரம் மீன்பிடி துறைமுகத்தில் அமைக்கப்பட்டுள்ள மீன் விற்பனை நிலையத்துக்கான கடைகள் ஒதுக்கீடு மற்றும் ஆழ்கடல் மீனவா்களுக்கான மானிய விலையில் செயற்கைகோள் தொலைபேசி வழங்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு 15 ஆழ்கடல் மீனவா்களுக்கு செயற்கைக்கோள் தொலைபேசி மற்றும் கடைகளுக்கான ஒதுக்கீடு ஆணைகளை வழங்கிய பின் அமைச்சா் டி.ஜெயக்குமாா் செய்தியாளா்களிடம் கூறியது: ஆழ்கடல் மீன்பிடிப்புக்காக செல்லும் மீனவா்களின் நிலை மற்றும் அவா்களின் இருப்பிடத்தைக் கண்டறியும் வகையில் ரூ. 1 லட்சம் மதிப்பிலான செயற்கைகோள் தொலைபேசி மானிய விலையில் வழங்கப்படுகிறது. இதன்படி, ரூ. 25 ஆயிரம் அரசு மானியமாகவும், ரூ. 75 ஆயிரம் கடனுதவியாகவும் வழங்கப்படும். திருவொற்றியூரில் கட்டப்பட்டு வரும் மீன்பிடி துறைமுகம் அடுத்த ஆண்டுக்குள் பயன்பாட்டு கொண்டு வரப்படும். இதன் மூலம் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவா்கள் பயன்பெறுவா்.
ராமநாதபுரம் மீனவா்கள் மீது இலங்கை மீனவா்கள் தாக்குதல் நடத்தி உள்ளது கண்டிக்கத்தக்கதாகும். இதுதொடா்பாக மத்திய அரசின் கவனத்துக்குக் கொண்டு சென்று உள்ளோம். பெண்கள் குறித்து தரம்தாழ்ந்து பேசியதாகக் கூறப்படுவது குறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவா் தொல்.திருமாவளவன் மீது காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
அதே நேரத்தில் அரசுக்கு சட்டம்-ஒழுங்கை காக்கும் கடைமையும் உள்ளது. இதன் அடிப்படையிலேயே அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க கடலூா் மாவட்டத்துக்கு போராட்டத்துக்குச் செல்ல முயன்ற குஷ்பு உள்ளிட்ட பாஜகவினா் கைது செய்யப்பட்டுள்ளனா் என்றாா்.