விழுப்புரம் மாவட்டம் அரசூர் அருகே மழை பெய்து மலட்டாற்றில் மழைநீர் வெள்ளமாக புரண்டோட வேண்டும் என்பதை வலியுறுத்தி, ஜீவநதி அமைப்பினர் மற்றும் கிராம மக்கள் திங்கள்கிழமை வருண பூஜை செய்து வழிபாடு செய்தனர்.
விழுப்புரத்தையடுத்த அரசூர் மலட்டாற்றில் ஏற்பட்டிருந்த மணல் திட்டுகளை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஜீவநதிஅமைப்பினர், தூர்வாரி கடலூர் மாவட்டம் கட்டமுத்து பாளையம் வரை கரைகளை வலுப்படுத்தியுள்ளனர்.
இந்நிலையில் கடந்த சில வருடங்களாக மலட்டாற்றில் நீர் வரத்து இல்லாமல் இருப்பதால், அப்பகுதியில் நிலத்தடி நீர் மட்டமும் குறைந்து வருகிறது. நிலத்தடி நீர்மட்டம் உயரவும், அதிகமான மழை பொழிவு வேண்டி ஒவ்வொரு வருடமும் விஜயதசமி தினத்தன்று ஜீவநதி அமைப்பினர் மூலம் மழை வேண்டி வருண பூஜை நடைபெறுவது வழக்கம்.
அதனடிப்படையில் இன்று அந்த அமைப்பின் தலைவர் தட்சணாமூர்த்தி தலைமையில் வருண பூஜை நடைபெற்றது. இதில் கிராம மக்கள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டு யாகம் நடத்திப் பூஜிக்கப்பட்ட கலசநீரை, ஆற்றில் கொட்டி வருணபகவானை வழிபட்டனர். இந்த பூஜை நடைபெற்ற 90 நாட்களுக்ளில் அதிக மழை பெய்யக்கூடும் என்பது இப்பகுதி மக்களின் நம்பிக்கையாக உள்ளது.