அரசுத் திட்டங்களை குறை கூறுவதையே ஸ்டாலின் வாடிக்கையாக வைத்துள்ளார் என அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் அமைச்சர் கடம்பூர் ராஜு செய்தியாளர்களிடம் கூறியதாவது:
எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், அரசுத் திட்டங்களை குறை கூறுவதையே வாடிக்கையாக வைத்துள்ளார். எதிர்க்கட்சி என்றால் அரசியல்தான் செய்யும் என்பதை அவரே ஒப்புக்கொண்டுள்ளார். அரசியல் செய்வதற்கு எவ்வளவோ வழி உள்ளது. ஆனால், அரசின் அனைத்துத் திட்டங்களையும் குறை கூறக் கூடாது.
ஆளுங்கட்சியும், எதிர்க்கட்சியும் நாணயத்தின் இரு பக்கங்களைப் போல் செயல்பட வேண்டும் என்று அறிஞர் அண்ணா கூறியுள்ளார். ஆனால், அவர்கள் வழி வந்தவர்கள் என்று கூறிக்கொண்டு இவ்வாறு செயல்பட்டால் மக்கள் அவர்களை நிராகரிப்பார்கள்.
பண்டிகைக் காலங்களில் திரையரங்குகளைத் திறப்பதில் நாங்களும் ஆவலாக இருக்கிறோம். ஆனால், மத்திய அரசு வழிகாட்டு நெறிமுறைகளை வழங்கியுள்ளது. அதனை கடைப்பிடிக்கும் சாத்தியக்கூறுகள் உள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. வருகிற 28 ஆம் தேதி இதுகுறித்து தமிழக முதல்வர் ஆய்வு கூட்டம் நடத்துகிறார். அதன்பிறகு திரையரங்குகளை திறப்பது குறித்து முடிவு செய்யப்படும்.
திரையரங்குகள். திறக்கப்பட வேண்டும். அதேநேரத்தில் மக்கள் பாதிக்கப்படக் கூடாது என்பதில் அரசு கவனமாக இருக்கிறது என்றார்.