7.5 சதவீதம் ஒதுக்கீடு நிறைவேறும் என்பதை அறிந்தே, அரசியலுக்காகப் போராட்டம் நடத்துகிறார் ஸ்டாலின் என்று அமைச்சர் சிவி சண்முகம் விமர்சித்துள்ளார்.
விழுப்புரத்தில் சனிக்கிழமை நடைபெற்ற அரசு நலத்திட்ட விழாவில் பங்கேற்ற அமைச்சர் சிவி சண்முகம் செய்தியாளரிடம் கூறியதாவது:
நீட் தேர்வில் வெற்றி பெற்ற அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்க வேண்டும் என முதல்வர் பழனிசாமி முயற்சியில் சட்டப்பேரவை தீர்மானம் போட்டு ஆளுநர் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இதனையடுத்து ஐந்து அமைச்சர்கள் நேரடியாகவும் ஆளுநரை சந்தித்து வலியுறுத்தினோம். ஆளுநரும் சில விளக்கங்கள் கேட்டார் அதற்கு பதில் அளித்துள்ளோம். 20 நாள்களில் அல்லது முன்பாகவோ அவர் ஒப்புதல் அளிப்பார் என்ற நம்பிக்கை உள்ளது.
இந்த சிறப்பு நடவடிக்கையை முதலமைச்சர் கொண்டு வந்து, அவர் நற்பெயர் பெற கூடாது என்பதால், திமுக தலைவர் ஸ்டாலின், ஏதோ அவர் போராட்டம் நடத்தியதால் தான் கிடைப்பது போன்ற நாடகம் நடத்துகிறார். மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கை இன்னும் தொடங்குவதற்கான நாள்களும் உள்ளன. இதற்கான ஒப்புதல் பெறும் வரை கலந்தாய்வு நடத்தக்கூடாது என்பதில் அரசும் தெளிவாக உள்ளது. இதில் அரசியல் செய்வதற்காகவே, ஸ்டாலின் போராட்டம் நடத்துகிறார்.
நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வை ரத்து செய்வோம் என்ற ஸ்டாலின், எப்படிச் செய்வீர்கள் என்று கேட்ட போது, நாங்கள் ஆட்சிக்கு வந்தால் சொல்கிறோம் என்றார். ஆட்சிக்கு வருவது தான் அவருடைய எண்ணம், மக்கள் நலனில் அக்கறை இல்லை அவர்களுக்கு என்றார் சிவி சண்முகம். தொடர்ந்து திருமாவளவன் சர்ச்சை பேச்சு குறித்து கேட்டபோது, தமிழகத்தில் இப்படி ஒரு கலாசாரம் ஏற்பட்டிருக்கிறது.
மதம் சார்ந்த, மக்கள் நம்பிக்கை சார்ந்தவற்றுக்கு எதிராக கருத்து தெரிவிப்பது. இதேபோல்தான் கந்தர் சஷ்டி கவசம் குறித்து கருத்து தெரிவித்த, கருப்பர் கூட்டத்தின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதுபோன்ற கருத்துக்கள் மக்கள் மனதில் எப்படிச் சேரும் என்பதை உணர வேண்டும். இதனால் மக்கள் நம்பிக்கை சார்ந்த விஷயங்களில் பேசும்போது ஜாக்கிரதையாக பேச வேண்டும் என்பதே எனது கருத்தாகும் என்றார்.