சென்னை: சென்னையில் இன்று மாலை பரவலாக பலத்த மழை பெய்தது. ஒரு மணி நேரத்தில் நுங்கம்பாக்கம், கே.கே. நகர், முகப்பேரில் தலா 6 செ.மீ. மழைப் பதிவாகியுள்ளது.
சென்னையில் இன்று முற்பகலில் வெயில் வெளுத்து வாங்கிய நிலையில், பிற்பகலில் வானிலையில் சற்று மாறுதல் ஏற்பட்டது.
வானம் மேகமூட்டமாக மாறி, மாலை 3 மணிக்கு மேல் பரவலாக சென்னையில் மழை கொட்டியது. நுங்கம்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஒரு மணி நேரத்துக்குள் 6 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
சென்னையில் அம்பத்தூர், நுங்கம்பாக்கம், கே.கே. நகர், முகப்பேர், பெசன்ட் நகர், கீழ்ப்பாக்கம், திருவான்மியூர், மடிப்பாக்கம், ராமாபுரம், மணலி, கொளத்தூர், மறைமலைநகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை கொட்டித் தீர்த்தது.
கூடுவாஞ்சேரி, அண்ணாநகர், பெருங்களத்தூர், விருகம்பாக்கம், மந்தைவெளி, சேலையூர், வேளச்சேரி, தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளிலும் இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக மழை பெய்துள்ளது.
சென்னையை அடுத்து காஞ்சிபுரம் மாவட்டத்தின் ஒரு சில இடங்களிலும் மழை பதிவாகியுள்ளது.