தருமபுரி: அதியமான் கோட்டை- ஓசூர் 4 வழிச்சாலைக்கு கையகப்படுத்தப்படும் நிலங்களுக்கான இழப்பீட்டுத் தொகை வேறுபாட்டை களைய வேண்டும் என தருமபுரி திமுக மக்களவை உறுப்பினர் டிஎன்விஎஸ்.செந்தில்குமார் தெரிவித்தார்.
தருமபுரி அருகே விருபாட்சிபுரத்தில், ஓசூர்-அதியமான் கோட்டை 4 வழிச்சாலைக்கு கையகப்படுத்தப்படும் நில உரிமையாளர்கள் மற்றும் அதிகாரிகளை சந்தித்து தருமபுரி தொகுதி மக்களவை உறுப்பினர் டிஎன்வி எஸ். செந்தில்குமார் பேசினார்.
அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியது: தருமபுரியில் இருந்து ஓசூருக்கு புதியதாக நான்கு வழி தேசிய நெடுஞ்சாலை அமைக்கப்பட உள்ளது. இதற்கான நிலம் கையகப்படுத்தும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. இந்த சாலை தருமபுரி மாவட்டத்தில் 40 கிலோமீட்டர் தொலைவு அமைய உள்ளது.
இந்த வழித்தடத்தில் 18 கிராமங்களில் உள்ளன. 4 வழிச்சாலை அமைக்க இக்கிராமங்களில் உள்ள நிலங்கள் கையகப்படுத்தப்பட்டுள்ளன. இதில் 11 கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகளுக்கு கையகப்படுத்தப்பட்ட நிலத்திற்கான இழப்பீட்டு தொகை ரூ. 50 கோடி வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள ஏழு கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்கும் பணியும் தற்போது நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் தங்களுக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ள இழப்பீட்டுத் தொகை பெரிய அளவில் வேறுபாடு உள்ளது என தருமபுரி பகுதியில் உள்ள விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
ஒரே நில அளவை எண்ணில் ஒருபகுதியில் சதுர அடிக்கு ரூ.16, மற்றொரு பகுதியில் சதுர அடிக்கு ரூ.1150 என நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இத்தகைய வேறுபாட்டை களைந்து நில உரிமையாளர்கள் கோருகின்ற இழப்பீடு தொகை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இது தொடர்பாக தனி வட்டாட்சியர் ஒருவரை நியமிக்க உள்ளதாக நிலம் கையகப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதேபோல இழப்பீட்டு தொகை வழங்குவதில் உள்ள வேறுபாடுகளை களைய வேண்டும் என மத்திய சாலை போக்குவரத்துத் துறை அமைச்சரை சந்தித்து முறையிட உள்ளதாக எம்.பி செந்தில்குமார் கூறினார்.