சென்னை: தாயார் மறைவைத் தொடர்ந்து, சென்னையில் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமியை ஆளுநர் புரோஹித், எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர். முதல்வரின் தாயாரின் உருவப் படத்துக்கு மலர்தூவி பலரும் மரியாதை செலுத்தினர்.
முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமியின் தாயார் கே.தவுசாயம்மாள் சேலத்தில் உடல்நலக் குறைவால் அண்மையில் காலமானார். இதையடுத்து, இறுதிச் சடங்குகள் உள்ளிட்ட நிகழ்வுகளில் பங்கேற்ற முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, அவற்றை முடித்துக் கொண்டு கடந்த ஞாயிற்றுக்கிழமை சென்னை திரும்பினார்.
முகாம் இல்லம்: சென்னையில் உள்ள முகாம் இல்லத்தில் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமியின் தாயார் உருவப் படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தும் நிகழ்வு திங்கள்கிழமை நடைபெற்றது. தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், துணைத் தலைவர் துரைமுருகன், திமுக துணை பொதுச் செயலாளர் க.பொன்முடி ஆகியோர் முதல்வர் பழனிசாமியின் தாயார் உருவப் படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தி ஆறுதல் தெரிவித்தனர்.
அமைச்சர்கள்: தமிழக அமைச்சர்கள் பி.தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம், ஓ.எஸ்.மணியன், உடுமலை கே.ராதாகிருஷ்ணன், எம்.ஆர்.விஜயபாஸ்கர், சேவூர் எஸ்.ராமச்சந்திரன், அதிமுக அவைத் தலைவர் இ.மதுசூதனன், பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் ஜான் பாண்டியன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர்கள் டி.கே.ரங்கராஜன், அ.சௌந்தரராஜன், அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், இந்திய ஜனநாயகக் கட்சியின் செயல் தலைவர் ரவி பச்சமுத்து உள்ளிட்ட அரசியல் கட்சியினர் நேரில் சென்று முதல்வரின் தாயார் படத்துக்கு மரியாதை செலுத்தினர்.
திரைத் துறையைச் சேர்ந்தவர்களில் நடிகர் விஜய் சேதுபதி, இயக்குநர் பார்த்திபன், கவிஞர் வைரமுத்து, நடிகைகள் ராதிகா, வெண்ணிற ஆடை நிர்மலா உள்ளிட்டோர் முதல்வருக்கு ஆறுதல் தெரிவித்தனர்.
தலைமைச் செயலாளர் க.சண்முகம், காவல் துறை தலைமை இயக்குநர் ஜே.கே.திரிபாதி, பேரவைச் செயலாளர் கி.சீனிவாசன், பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலாளர் தீரஜ் குமார், சிஎம்டிஏ உறுப்பினர் செயலாளர் டி.கார்த்திகேயன், கருவூல கணக்குத் துறை ஆணையர் சி.சமயமூர்த்தி, சென்னை மாவட்ட ஆட்சியர் ஆர்.சீதாலட்சுமி, அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர்கள், தமிழ்நாடு மருத்துவர்கள் சங்க நிர்வாகிகள், செவிலியர் சங்க நிர்வாகிகள் உள்ளிட்ட பலரும் மரியாதை செலுத்தும் நிகழ்வில் பங்கேற்று, முதல்வர் பழனிசாமிக்கு ஆறுதல் தெரிவித்தனர்.