அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு நவம்பர் 1 முதல் இலவச நீட் பயிற்சி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு கரோனா தொற்று காரணமாக ஒத்திவைக்கப்பட்டு பின்னர் பல்வேறு எதிர்ப்புக்கிடையே கடந்த செப்டம்பர் 13 ஆம் தேதி நடத்தப்பட்டது. இதற்கான முடிவுகள் கடந்த 16 ஆம் தேதி வெளியாகின.
கடந்த முறை தேர்வு முடிவில் அரசுப்பள்ளி மாணவர்கள் பெரிதாக வெற்றி பெறாத சூழ்நிலையில் இந்த ஆண்டு தேர்வு எழுதிய அரசுப்பள்ளி மாணவர்கள் 1,615 பேர் தேர்ச்சி பெற்றனர்.
இதையடுத்து, அடுத்த ஆண்டிற்கான நீட் தேர்வுக்கு பயிற்சி அளிக்கும் விதமாக வருகிற நவம்பர் 1 ஆம் தேதி முதல் இலவச பயிற்சி தொடங்கும் என தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. நடப்பாண்டு பள்ளிக்கல்வித்துறையுடன் இணைந்து கோவை தனியார் அமைப்பும் சேர்ந்தது 2021 நீட் தேர்வுக்கு இலவச பயிற்சி அளிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.