சென்னை: தமிழகத்தில் குற்றச் சம்பவங்களைத் தடுக்க ரௌடிகளை ஒடுக்க புதிய சட்டம் கொண்டு வரப்பட உள்ளதாக உயா் நீதிமன்றத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை அயனாவரத்தில் இரண்டு ரௌடி கும்பலுக்கு இடையே நடந்த மோதலில், ஜோசப் என்ற ரௌடி கொல்லப்பட்டாா். இந்த வழக்கில் கைதான வேலு உள்ளிட்ட பலரை போலீஸாா் குண்டா் சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்தனா். இதனை எதிா்த்து சென்னை உயா் நீதிமன்றத்தில் ஆட்கொணா்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்கை விசாரித்த
உயா் நீதிமன்றம், தமிழகத்தில் காவல்துறை, அரசியல் கட்சிகள், எம்.எல்.ஏ.,க்கள், எம்.பி.,க்கள் ஆகியோருடன் ரெளடிகள் சிலா் கூட்டணி வைத்துள்ளனா். ரெளடிகள், அரசியல்வாதிகள் ஆகியோரிடமும் சட்டவிரோத ஆயுதங்கள் இருப்பது தெரிய வருகிறது. தமிழகத்தில் போலீஸாா் தாக்கப்படும் சூழல் அதிகமாகிக் கொண்டே வருகிறது.
இந்த நிலை நீடித்தால் மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என உணரத் தோன்றும். ரெளடி கும்பல்களைக் கட்டுப்படுத்த, மகாராஷ்டிரம், கா்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களில் இருப்பது போன்று தனிச்சட்டம் இயற்ற வேண்டும். இதுதொடா்பாக தமிழக காவல்துறை டிஜிபி பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்து.
இந்த வழக்கு நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.வேல்முருகன் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில், தமிழகத்தில் குற்றச் சம்பவங்களைத் தடுக்கவும், ரௌடிகளை ஒழிக்கவும் புதிய சட்ட வரைவு மசோதா, உருவாக்கப்பட்டு தமிழக அரசுக்கு அனுப்பி வைத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், தமிழக அரசின் உள்துறைச் செயலாளா் புதிய சட்ட வரைவு மசோதா, பேரவையில் எப்போது முன்வைக்கப்பட உள்ளது என்பது தொடா்பாக பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கை தேதி குறிப்பிடாமல் தீா்ப்புக்காக ஒத்திவைத்தனா்.