உத்தரப்பிரதேசத்தில் ஹாத்ராஸ் இளம்பெண்ணின் குடும்பத்தினரைச் சந்திக்கச் சென்ற ராகுல்காந்தி மற்றும் பிரியங்கா காந்தி கைது செய்யப்பட்டதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
உத்தரப்பிரதேச மாநிலம் ஹாத்ராஸ் பகுதியில் 19 வயதான பட்டியலினத்தை சேர்ந்த இளம்பெண் ஆதிக்க சாதியை சேர்ந்த கும்பலால் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டார்.
மேலும் இளம்பெண்ணின் உடலை இரவோடு இரவாக அவர்களது பெற்றோர்களின் எதிர்ப்பையும் மீறி காவல்துறையினர் எரித்தனர். இதற்கு நாடு முழுவதும் பல்வேறு அமைப்புகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.
இந்த நிலையில் பாதிக்கப்பட்ட இளம்பெண்ணின் குடும்பத்தினரை சந்திக்க உத்தரப்பிரதேசம் வந்த காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் ராகுல்காந்தி மற்றும் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி ஆகியோரை காவல்துறையினர் தடுத்ததால் அவர்கள் ஹாத்ராஸ் பகுதி நோக்கி நடைபயணம் மேற்கொண்டார்.
இதனால் சட்டம் - ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என்பதால் ராகுல்காந்தியை உத்தரப்பிரதேச மாநில காவல்துறையினர் கைது செய்தனர்.
இதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக கண்டன அறிக்கை வெளியிட்டுள்ள மு.க.ஸ்டாலின், “உத்தரப்பிரதேசத்தில் தொடரும் பாலியல் வன்கொடுமைச் சம்பவங்கள், அந்த மாநிலம் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லாததாக உள்ளது என்பதையே எடுத்துக் காட்டுகிறது." எனக் குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும் "பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ஆறுதல் கூறச் சென்ற திரு. ராகுல் காந்தி அவர்களை, ஓர் அகில இந்தியத் தலைவர் என்றும் பாராமல், பிடித்துத் தள்ளி மரியாதைக் குறைவாக நடத்துவது மனித உரிமைகளுக்கும், ஜனநாயக நெறிமுறைகளுக்கும் எதிரானது; இதற்கு உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் பகிரங்க மன்னிப்புக் கோர வேண்டும்." என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.