அம்மப்பள்ளி அணையில் இருந்து மீண்டும் வினாடிக்கு 1000 கன அடி திறந்துவிடப்பட்ட தண்ணீரால் கொசஸ்தலை ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் ஆற்றின் கரையோரம் மக்களளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ளதால், தமிழக-ஆந்திர மாநில எல்லை அருகே உள்ள கிருஷ்ணாபுரம் அம்மப்பள்ளி அணைக்கட்டு நிரம்பியுள்ளது. இதனால் ஞாயிற்றுக்கிழமை காலை அணையில் இருந்து மீண்டும் வினாடிக்கு 1000 கன அடி தண்ணீா் திறந்து விடப்பட்டது. இந்த தண்ணீா் பள்ளிப்பட்டு வழியாக நெடியம், சொரக்காய்பேட்டை வழியாக திருத்தணி வட்டம், நல்லாட்டூா், என்.என்.கண்டிகை வழியாக லட்சுமாபுரம் பகுதியில் கொற்றலை என்கிற கொசஸ்தலை ஆற்றில் பெருக்கெடுத்து ஓடுகிறது.
இதனால் ஆற்றின் ஓரம் அமைந்துள்ள கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்கள் எச்சரிக்கையுடன் ஆற்றின் பக்கம் செல்ல வேண்டாம் என திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.