அருப்புக்கோட்டை: விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை மற்றும் சுற்றுவட்ட கிராமங்களில் ஞாயிற்றுக்கிழமை இடைவெளி விட்டுவிட்டு மிதமான தொடர்மழை பெய்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.
அருப்புக்கோட்டை மற்றும் சுற்றுவட்ட கிராமங்களில் ஞாயிற்றுக்கிழமை காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இந்நிலையில் அன்று காலை சுமார் 9.20 மணியளவில் சுமார் 20 நிமிடம் மிதமான மழை பெய்தது. அடுத்ததாக சுமார் 11.30 மணியளவில் தொடர்ந்து சுமார் 20 நிமிடம் மிதமான மழை பெய்தது.
இப்பருவத்தில் தொடர்ந்து அடுத்தடுத்து பலவாரங்களாக நல்ல மழை பெய்து வருவதால் புறநகர் மற்றும் சுற்றுவட்ட கிராமங்களில் ராபி பருவ விவசாயத்திற்கு மிக நல்ல சூழல் தொடர்ந்து நிலவி வருகிறது. இதனால், பயறுவகை சாகுபடி முடிந்து அடுத்தகட்ட சாகுபடிக்கு விவசாயிகள் தங்கள் பணிகளைத் துரிதமாக்கியுள்ளனர்.