பவானி: பவானி எடுத்த ஆப்பக்கூடல் அருகே திருமணமாகி 3 மாதமே ஆன புதுப்பெண் கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டார்.
அந்தியூர் அடுத்த பர்கூர் மலைப்பகுதியில் உள்ள தேவர் மலை கிராமத்தைச் சேர்ந்தவர் மாதேஷ். இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த சரஸ்வதி (19) என்பவருக்கும் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. திருமணத்துக்குப்பின் இருவரும் ஆப்பக்கூடல் அடுத்த குப்பாண்டபாளையத்தில் உள்ள நூற்பாலையில் வேலை செய்து வந்தனர்.
இவர்களுக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்த நிலையில், மனைவி சரஸ்வதி கடந்த சில நாள்களுக்கு முன்பு வீட்டை விட்டுச் சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இதனால், மாயமான தனது மனைவியைக் கண்டுபிடித்து தருமாறு மாதேஷ் ஆப்பக்கூடல் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
இந்நிலையில், மாயமான சரஸ்வதி குப்பாண்டபாளையம் சண்முகம் என்பவரின் தோட்டத்தில் விவசாயக் கிணற்றில் உயிரிழந்த நிலையில் கிடப்பது ஞாயிற்றுக்கிழமை தெரியவந்தது. இதுகுறித்த தகவலின்பேரில் அந்தியூர் தீயணைப்புப்படையினர் சரஸ்வதியின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
குடும்பத் தகராறில் திருமணமாகி 3 மாதமே ஆன புதுப்பெண் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.