வங்கக்கடலின் தென்கிழக்கு அந்தமான் அருகே ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவானது என்று சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று வரும் 2-ஆம் தேதி தென்கிழக்கு கடலோரப் பகுதியை நோக்கி நகர உள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் டிசம்பர் 1-ஆம் தேதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிசம்பர் 2-ஆம் தேதி கனமழை பெய்யும் மாவட்டங்கள்: கன்னியாகுமரி, தூத்துக்குடி, ராமநாதபுரம், தென்காசி, மாவட்டங்களில் அதி கனமழையும், திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
டிசம்பர் 3-ஆம் தேதி கனமழை பெய்யும் மாவட்டங்கள்: கன்னியாகுமரி, தேனி, தூத்துக்குடி, விருதுநகர், மாவட்டங்களில் மிக கனமழையும், ஏனைய கடலோர மாவட்டங்களான புதுச்சேரி, காரைக்கால் மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்யக் கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.