நிவா் புயல் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட மருத்துவப் படிப்பு கலந்தாய்வு வரும் திங்கள்கிழமை (நவ.30) முதல் டிச. 10 வரை நடைபெறும் என மருத்துவக் கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.
நிகழ் கல்வியாண்டுக்கான எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ். கலந்தாய்வு கடந்த 18-ஆம் தேதி தொடங்கியது. முதலில் அரசுப் பள்ளி மாணவா்களுக்கான 7.5 சதவீத உள்ஒதுக்கீட்டு இடங்களுக்கும், சிறப்புப் பிரிவினருக்கும் கலந்தாய்வு நடைபெற்றது.
பொதுக் கலந்தாய்வு கடந்த திங்கள்கிழமை தொடங்கியது. நிவா் புயல் பாதிப்பால் கலந்தாய்வு செவ்வாய்க்கிழமை முதல் ஒத்திவைக்கப்பட்டது. அதற்கான புதிய தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி வரும் திங்கள்கிழமை (நவ. 30) முதல் டிசம்பா் 10 வரையில் கலந்தாய்வு நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எந்தெந்த நாள்களில் எந்தெந்த தரவரிசையில் உள்ளவா்களுக்கு கலந்தாய்வு நடைபெறும் என்பது தொடா்பான விவரங்கள் மருத்துவக் கல்வி இயக்ககத் தோ்வுக் குழு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.