பழனி பாலாறு-பொருந்தலாறு அணையிலிருந்து பாசன வசதிக்காகத் தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதன்மூலம் 6 ஆயிரத்து நூற்று 68 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ளது பாலாறு-பொருந்தலாறு அணை. மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக பாலாறு-பொறுந்தலாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்து அணை நிரம்பும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் பாசன வசதிக்காக அணையை திறக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். விவசாயிகளின் கோரிக்கையை ஏற்ற தமிழக அரசு பாலாறு-பொறுந்தலாறு அணையிலிருந்து தண்ணீர் திறக்க உத்தரவிட்டது. இதையடுத்து பழனி கோட்டாட்சியர் அசோகன் பாலாறு அணையிலிருந்து பழைய ஆயக்கட்டு பாசனத்துக்காகத் தண்ணீர் திறந்து விட்டார்.
இன்று முதல் வருகிற மார்ச் மாதம் வரை 120 நாள்களுக்கு விநாடிக்கு 116 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்ட பழைய ஆயக்கட்டு கால்வாய் நீர் மூலம் பெரியம்மாபட்டி, தாமரைக்குளம், அ.கலையமுத்தூர், மானூர் கோரிக்கடவு மற்றும் கீரனூர் பகுதிகளில் உள்ள 6168 ஏக்கர் விவசாய நிலம் பயன்பெறும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்நிகழ்ச்சியில் பழனி வட்டாட்சியர் வடிவேல் முருகன் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர். அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டதால் அப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.