மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரித்திருப்பதால் வெள்ளிக்கிழமை இரவுக்குள் மேட்டூர் அணையின் நீர்மட்டம் நடப்பு ஆண்டில் நான்காவது முறையாக 100 அடியாக உயரும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
காவிரி டெல்டா மாவட்டங்களில் பெய்து வரும் மழையின் காரணமாக டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு 500 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது. இதேபோல் கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவும் 250 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வெள்ளிக்கிழமை காலை வினாடிக்கு 6512 கன அடியிலிருந்து 8,111கன அடியாக அதிகரித்துள்ளது. நீர் வரத்து அதிகரித்திருப்பதால் வெள்ளிக்கிழமை இரவுக்குள் மேட்டூர் அணை நீர்மட்டம் நடப்பு ஆண்டில் நான்காவது முறையாக 100 அடியாக உயரும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வெள்ளிக்கிழமை காலை மேட்டூர் அணை நீர்மட்டம் 99.80 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 8,111கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 250 கன அடி வீதமும், காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 500 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 64.58 டிஎம்சி ஆக உள்ளது.