திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் அம்மா உணவகம் முன்பு, கழிவு நீர் வழிந்து நிரம்பியதால், நகராட்சி நிர்வாகம் நடவடிக்கைக் கோரி பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
திருவாரூர் - மன்னார்குடி பிரதான சாலை, கூத்தாநல்லூர் புது பேருந்து நிலையம் முன்பு அமைந்துள்ளது அம்மா உணவகம். இந்த அம்மா உணவகத்தில், கரோனா தொற்று ஊரடங்கு காலத்தில், உணவுத்துறை அமைச்சர் இரா.காமராஜ் ஏற்பாட்டின்படி, தினமும் 850 பேருக்கு 3 வேளையும் உணவு வழங்கப்பட்டன. 3 வேளை உணவுகளையும், நகராட்சியின் 24 வார்டுகளிலும், 850 பேருக்கும் நகராட்சி பணியாளர்கள் மூலம், வீடு தேடிச் சென்று வழங்கப்பட்டு வந்தன.
இந்நிலையில், அம்மா உணவகத்தின் கழிவு நீர்கள் சென்று நிரம்பக் கூடிய, கழிவு நீர் தொட்டி நிரம்பியுள்ளன. கழிவு நீர் அள்ளப்படாததால், கழிவு நீர் வழிந்து, அம்மா உணவகத்தின் முன்பு தேங்கி நிற்கிறது. இதனால், தேங்கியுள்ள கழிவு நீரில் கொசுக்கள் மொய்க்கின்றன. மேலும், துர்நாற்றம் வீசி, நோய்த் தொற்றுகள் ஏற்படவும் பெரும் வாய்ப்பாக அமைந்துள்ளது. உடன், நகராட்சி நிர்வாகம் கவனித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.