திருச்சி: தொழிலாளர்கள் மற்றும் மாணவர்களிடம் ஒருமாத வாடகையை வசூலிக்க கூடாது என வீட்டு உரிமையாளர்களுக்கு திருச்சி டி.ஐ.ஜி. அறிவுறுத்தியுள்ளார்.
சீனாவில் வூஹான் மாகாணத்தில் கண்டறியப்பட்ட கரோனா வைரஸ் தற்போது உலகத்திற்கே அச்சுறுத்தலாக உருமாறியுள்ளது. இதுவரை இந்தியாவில் 1071 பேர் இந்த வைரஸ் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் 29 பேர் பலியாகியுள்ளனர். தமிழகத்தில் ஒருவர் பலியாகியுள்ள நிலையில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஐம்பதைத் தாண்டி விட்டது.
மேலும் கரோனா பரவுவதைத் தடுக்கும் பொருட்டு கடந்த 24-ஆம் தேதி நள்ளிரவு முதல் வரும் ஏப்ரல் மாதம் 14-ஆம் தேதி வரை இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பொதுமக்கள் நிறைய சிரமங்களை அனுபவித்து வருகின்றனர்.
இந்நிலையில் தொழிலாளர்கள் மற்றும் மாணவர்களிடம் ஒருமாத வாடகையை வசூலிக்க கூடாது என வீட்டு உரிமையாளர்களுக்கு திருச்சி டி.ஐ.ஜி. பாலகிருஷ்ணன் அறிவுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் தெரிவித்துள்ள தகவலில், ‘வாடகைக்காக மாணவர் / தொழிலாளர்களை காலி செய்ய வற்புறுத்தினால் உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், வாடகை வீட்டிலிலுள்ள தொழிலாளர்களிடம் ஒருமாத வாடகையை வசூலிக்க கூடாது’ என்றும் அறிவுறுத்தியுள்ளார்.
இது திருச்சி சரகத்திற்கு உட்பட்ட 5 மாவட்ட வாடகை உரிமையாளர்களுக்கும் பொருந்தும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.