விழுப்புரம் மாவட்டம், பட்டானூர் தனியார் விடுதியில் தங்கியிருந்த மேற்கு வங்கத்தைச் சேர்ந்த 10 பேர் புதுச்சேரியில் தவித்து வருகின்றனர்.
புதுச்சேரி ஜிப்மரில் சிகிச்சை பெற்று வரும் தனது உறவினரைப் பார்ப்பதற்கு, மருத்துவமனை அருகே உள்ள விழுப்புரம் மாவட்டம், பட்டானூர் தனியார் விடுதியில் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த 10 பேர் தங்கி இருந்தனர். மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த அவர்களை, விடுதி நிர்வாகம், கரோனா பீதியால் ஞாயிற்றுக்கிழமை உடனடியாக வெளியேற்றி உள்ளது.
புதுச்சேரி ஜிப்மருக்கும் செல்ல முடியாமல் தங்கியிருப்பதற்கு வழியின்றி தவித்தனர். இதனையடுத்து திங்கள்கிழமை விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்த அவர்கள், தங்களுக்கு மாவட்ட நிர்வாகம் உதவுமாறு விழுப்புரம் மாவட்ட ஆட்சியர், மாவட்ட கண்காணிப்பாளரிடம் கோரிக்கை வைத்தனர்.
விசாரித்த மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை, கோட்டக்குப்பம் காவல் துணை கண்காணிப்பாளருக்குப் பரிந்துரைத்து, அவர்கள் தங்கியிருக்க உரிய நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட்டார். இதனையடுத்து அவர்கள் கோட்டகுப்பம் புறப்பட்டுச் சென்றனர்.