ஈரோடு: கரோனா நோய் தடுப்பு நடவடிக்கை காரணமாக ஈரோடு மாவட்டத்திலுள்ள முக்கிய 14 கோயில்களில் பக்தர்கள் தரிசனம் நாளை முதல் வரும் 31 ஆம் தேதி வரை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. தமிழக முதல்வர் உத்தரவின்படி இந்த நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் சி.கதிரவன் தெரிவித்தார்.
தரிசனம் ரத்து செய்யப்படும் கோயில்கள் விவரம்:பண்ணாரி மாரியம்மன் கோயில், பவானி சங்கமேஸ்வரர் கோயில், கொடுமுடி மகுடேஸ்வரர் கோயில், சென்னிமலை முருகன் கோயில், பச்சைமலை முருகன் கோயில், பவளமலை முருகன் கோயில், மொடக்குறிச்சி நட்டாற்றீஸ்வரர் கோயில், திண்டல் முருகன் கோயில், அந்தியூர் பத்ரகாளியம்மன் கோயில், ஈரோடு பெரிய மாரியம்மன் கோயில், பவானி செல்லியாண்டி அம்மன் கோயில், தாளவாடி மல்லிகார்ஜுன சுவாமி கோயில், ஈரோடு பத்ரகாளியம்மன் கோயில், பெருந்துறை செல்லியாண்டி அம்மன் மற்றும் சோளீஸ்வரர் கோயில் மற்றும் தம்பிக்கலை ஐயன் கோயில்.
இந்த கோயில்களில் வரும் 31 ஆம் தேதி வரை பக்தர்கள் தரிசனம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இருப்பினும் ஆகம விதிகளின்படி, இந்த கோயில்களில் அனைத்து பூஜைகளும் எப்போதும் போல் நடைபெறும் என ஆட்சியர் தெரிவித்தார்