தமிழகத்தில் களத்தில் பணியாற்றும் அனைத்து காவலர்களுக்கும் முழு முகக்கவசம் வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
கரோனா தடுப்புப் பணியில் ஈடுபடும் காவலர்கள், துப்புரவுப் பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யக்கோரி மதுரையைச் சேர்ந்த சத்தியமூர்த்தி என்பவர் மதுரைக்கிளையில் பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் சி.என். பிரகாஷ், புகழேந்தி அமர்வு முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறுகையில், 'தமிழகத்தில் களத்தில் பணியாற்றும் அனைத்து காவலர்களுக்கும் முழு முகக்கவசம் வழங்க வேண்டும். தமிழக காவல்துறையினர் அனைவருக்கும் முகத்தை முழுவதும் மறைக்கும் ஷீல்டு வழங்க வேண்டும். காவலர்கள் இதனைப் பயன்படுத்துவதை மாவட்ட எஸ்.பி.க்கள் உறுதிப்படுத்த வேண்டும்.
அதேபோன்று தமிழகத்தின் அணைத்து மாநகராட்சி, நகராட்சி, பஞ்சாயத்துகளில் துப்புரவு பணியாளர்கள் பாதுகாப்பு கவசங்களை அணிந்திருக்க வேண்டும். உள்ளாட்சித்துறை ஆணையர், மாவட்ட ஆட்சியர் இதனை கண்காணிக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.