திருச்சியில் 150க்கும் அதிகமான நபர்களிடம் சுமார் 20 கோடிக்கும் மேலாக சீட்டுப் பணம் வசூல் செய்து ஏமாற்றியவர்களிடமிருந்து பணத்தைப் பெற்றுத் தரக்கோரி பாதிக்கப்பட்ட மக்கள் பொருளாதார குற்றப் பிரிவு அலுவலகத்தில் புகார் செய்துள்ளனர்.
திருச்சி கோட்டை ரயில் நிலையம் அருகில் உள்ள ஜான் தோப்பு பகுதியில் வசித்து வரும் சுப்ரமணி என்கிற மணி அதே பகுதியில் வசித்து வரும் மக்கள், உறையூர், காந்தி மார்கெட் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள 150 க்கும் மேற்பட்டவர்களிடம் பணம் வசூலித்துநடத்தி வந்துள்ளார். அவரிடம் ஒரு லட்சம் ரூபாய் முதல் 10 லட்சம் ரூபாய் வரை அவரவர் மாதந்தோறும் குறிப்பிட்ட தொகையை மணியிடம் செலுத்தி வந்துள்ளனர்.குறிப்பிட்ட காலம் முடிந்த பின்பு அந்த தொகையை ஏலத்தின் மூலம் பெற்றுக்கொள்ளலாம் என அவர் கூறியுள்ளார். ஆனால் உரிய காலம் முடிந்த பின்பும் அவர்களுக்கு உரிய பணத்தை திரும்ப தராமல் ஏமாற்றி வந்துள்ளார்.
பாதிக்கப்பட்ட மக்கள் அவரது குடும்பத்தினரிடம் சென்று பணம் குறித்து கேட்கவே அவர்களை தகாத வார்த்தைகளில் திட்டி பணத்தை தர முடியாது என கூறியுள்ளனர். இதனை அடுத்து பாதிக்கப்பட்ட மக்கள் மாநகர காவல் அலுவலகத்தில் புகார் தெரிவித்துள்ள நிலையில் இன்று திருச்சி மன்னார்புரத்தில் செயல்பட்டு வரும் பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில் புகார் கொடுத்தனர்.
தரை கடை வியாபாரம், காய்கறி வியாபாரம், தள்ளு வண்டி கடை என உழைப்பால் சிறுக சிறுக சேர்த்த பணத்தை குழந்தைகளின் எதிர்கால தேவைக்கு வைத்துக் கொள்ளவே ஏலச்சீட்டுக்குப் பணம் கட்டினோம்.150 க்கும் மேற்பட்டோர் 20 கோடி ரூபாய் வரை கட்டியுள்ளோம். தற்போது அந்த பணத்தைத் திரும்பப் பெற முடியாமல் ஏமாந்துள்ளோம். எனவே எங்களுடைய பணத்தை எங்களுக்கு மீட்டுத் தர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பாதிக்கப்பட்டவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்