கும்மிடிப்பூண்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு உள்பட்ட ஏடூர் ஊராட்சிக்குள்பட்ட கும்புளி கிராமத்தில் கும்புளி மற்றும் சென்னை கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையை இணைக்கும் சாலை மழை வெள்ளத்தால் மூழ்கியது.
ஒவ்வொரு முறை பருவமழையின் போது கும்புளி பகுதியில் மேற்கண்ட சாலை மழை வெள்ளத்தால் மூழ்குவது வாடிக்கையாக இருந்து வருகிறது. இது குறித்து இப்பகுதி மக்கள் அதிகாரிகளிடம் பல முறை கோரிக்கைகளை வைத்தும் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.
இந்நிலையில், கடந்த சில நாள்களாக கும்மிடிப்பூண்டி சுற்றுவட்டார பகுதியில் பெய்து வரும் கனமழை காரணமாக மும்பையில் இருந்து சென்னை தேசிய நெடுஞ்சாலையை இணைக்கும் இரண்டு கிலோமீட்டர் தூர சாலை ஆனது மழை வெள்ளத்தால் முற்றிலும் மூழ்கியது. இதனால் அப்பகுதி மக்கள் இரு சக்கர வாகனத்தில் செல்ல கூட மிகவும் பயப்படும் சூழல் உருவாகியுள்ளது.
கும்புளி பகுதியில் மேற்கண்ட சாலையை உயர்த்தி தரைப்பாலம் ஆக உருவாக்க வேண்டுமென்று பாமக ஒன்றிய கவுன்சிலர் மணிமேகலை கேசவன் கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் மற்றும் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளுக்கும் தமிழக அரசுக்கும் கோரிக்கை வைத்துள்ளார்.