தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தாலுகாவிற்கு வைகை அணையிலிருந்து ரூ.162.43 கோடி மதிப்பீட்டில் புதிய கூட்டு குடிநீர் திட்ட பணிகளை வெள்ளிக்கிழமை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார்.
ஆண்டிபட்டி ஒன்றியம் மற்றும் கடமலை - மயிலை ஒன்றியத்தில் உள்ள 250க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு வைகை அணையில் இருந்து சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க முடிவு செய்து இதற்கான ஆய்வு பணிகள் நடைபெற்றது.
ஆய்வு பணிகள் முடிந்த நிலையில் இந்த திட்டத்திற்கு ரூ.162 கோடி 43 லட்சம் நிதியை மாநில அரசு ஒதுக்கீடு செய்தது. இதனையடுத்து புதிய கூட்டுக்குடிநீர் திட்டப்பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழா ஆண்டிபட்டி அருகே உள்ள திருமலாபுரம் விலக்கு பகுதியில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொண்டு புதிய கூட்டுக்குடிநீர் திட்டத்திற்கான பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.
இந்த புதிய கூட்டுக்குடிநீர் திட்டத்தின்படி ஆண்டிபட்டி ஒன்றியம் மற்றும் கடமலை -மயிலை ஒன்றியத்தில் உள்ள 250 கிராமங்களில் சுத்தகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. வைகை அணையில் இருந்து இந்த பகுதிகளுக்கு தண்ணீர் கொண்டு செல்லும் வகையில் 40 இடங்களில் பிரமாண்ட தரைநீர்தேக்க தொட்டிகள் அமைக்கப்பட உள்ளதாகவும், சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டு விரைவில் பொதுமக்களுக்கு குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.