மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி வெள்ளிக்கிழமை இ.கம்யூ மற்றும் மா.கம்யூ கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி இ.கம்யூனிஸ்ட் மற்றும் மா.கம்யூனிஸ்ட் கட்சியினர் வெள்ளிக்கிழமை சாலைமறியலில் ஈடுபட்டனர்.
இ.கம்யூனிஸ்ட் மற்றும் மா.கம்யூனிஸ்ட் கட்சியினர் சார்பில் புதிய பேருந்துநிலையம் முன்பாக நடைபெற்ற இந்த சாலைமறியல் போராட்டத்திற்கு மா.கம்யூனிஸ்ட் கட்சியின் நகரப் பொறுப்பாளர் காத்தமுத்து தலைமை வகித்தார்.அப்போது சுமார் 50க்கு மேற்பட்ட அக்கட்சிகளின் தொண்டர்கள் நேரில் பங்கேற்றதுடன், மத்திய அரசு கொண்டு வந்த புதிய வேளாண் சட்டங்கள் பெருநிறுவனங்களுக்குச் சாதகமாகவும், விவசாயிகளுக்குப் பாதகமாகவும் இருக்குமெனவும் எனவே அச்சட்டங்களைத் திரும்பப்பெறவேண்டுமெனவும் வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் முழக்கமிட்டனர்.
பின்னர் அவர்கள் அனைவரும் திரண்டு சாலை மறியலில் ஈடுபட்டுத் தொடர்ந்து முழக்கமிட்டனர்.அப்போது பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த அருப்புக்கோட்டை நகர் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் ராஜபுஷ்பா சாலைமறியலில் ஈடுபட்டவர்களுடன் சமரசம் பேசினார்.ஆனால் அவர்கள் சாலை மறியலைக் கைவிட மறுத்தனர்.
எனவே காவல்துறையினர் அவர்களில் சுமார் 50க்கு மேற்பட்டோரைக் கைது செய்ததுடன், ஒரு தனியார் சிற்றுந்தில் ஏற்றி தனியார் திருமண மண்டபமொன்றில் சிறை வைத்தனர்.இப்போராட்டத்தின்போது அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.