ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் அஜிங்கியா ரஹானே மற்றும் ஷர்துல் தாக்குரின் பொறுப்பான ஆட்டத்தால் இந்திய அணி ஓரளவுக்கு சரிவுப் பாதையில் இருந்து மீண்டுள்ளது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி லண்டனின் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. ஆஸ்திரேலிய அணி தனது முதல் இன்னிங்ஸில் 469 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. இதனையடுத்து, தனது முதல் இன்னிங்ஸில் விளையாடிய இந்திய அணி இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 151 ரன்கள் எடுத்திருந்தது. ரஹானே 29 ரன்களுடனும் மற்றும் பரத் 5 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
இதையும் படிக்க: விக்னேஷ் சிவன் - நயன்தாரா திருமண நாள்.. புகைப்படங்கள் வெளியீடு!
இந்த நிலையில், இன்று (ஜூன் 9) மூன்றாம் நாள் ஆட்டம் தொடங்கியது. ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே பரத் 5 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனையடுத்து, ரஹானேவுடன் ஜோடி சேர்ந்தார் ஷர்துல் தாக்குர். இந்த இணை ஆட்டத்தின் பொறுப்பை உணர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. சிறப்பாக விளையாடிய இருவரும் அரைசதம் கடந்தனர். அஜிங்கியா ரஹானே 89 ரன்களில் கம்மின்ஸ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அதில் 11 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கும். ஷர்துல் தாக்குர் 51 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 6 பவுண்டரிகள் அடங்கும். இவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய உமேஷ் யாதவ் 5 ரன்களிலும், முகமது ஷமி 13 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இதன்மூலம், இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 296 ரன்களுக்கு தனது அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
ஆஸ்திரேலியா தரப்பில் பாட் கம்மின்ஸ் 3 விக்கெட்டுகளையும், மிட்செல் ஸ்டார்க், ஸ்காட் போலண்ட் மற்றும் கேமரூன் கிரீன் தலா 2 விக்கெட்டுகளையும், நாதன் லயன் ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.