ஆஸ்திரேலிய அணியின் முக்கியமான மூன்று பேட்டர்களை வீழ்த்தி அசத்தியுள்ளார் சுழற்பந்து வீச்சாளர் ஜடேஜா.
ஆஸ்திரேலிய அணி இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்து 4 டெஸ்டுகள், 3 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடுகிறது.
டெஸ்ட் தொடர், இன்று முதல் தொடங்கியுள்ளது. நாகபுரியில் நடைபெற்று வரும் முதல் டெஸ்டில் டாஸ் வென்ற ஆஸி. அணி கேப்டன் கம்மின்ஸ், பேட்டிங்கைத் தேர்வு செய்தார்.
முதல் நாள் உணவு இடைவேளையின்போது ஆஸ்திரேலிய அணி, 32 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 76 ரன்கள் எடுத்தது. லபுஷேன் 47, ஸ்மித் 19 ரன்களுடன் களத்தில் இருந்தார்கள்.
உணவு இடைவேளைக்குப் பிறகு ஆஸ்திரேலிய அணியின் மூன்று பேட்டர்களான லபுஷேன், ஸ்மித், ரென்ஷா ஆகியோரை வீழ்த்தினார் ஜடேஜா.
காயம் காரணமாகக் கடந்த வருடம் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை, ஆசியக் கோப்பைப் போட்டிகளில் இருந்து ஜடேஜா விலகினார். முழங்காலில் ஏற்பட்ட காயத்துக்காக அறுவைச் சிகிச்சை மேற்கொண்டார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடும் இந்திய அணியில் ஜடேஜா இடம்பெற்றார். இதையடுத்து உடற்தகுதியை நிரூபிப்பதற்காக, செளராஷ்டிர அணிக்காக தமிழ்நாடு அணிக்கு எதிரான ரஞ்சி கோப்பை ஆட்டத்தில் விளையாடினார் ஜடேஜா. கடந்த ஜூலைக்குப் பிறகு எந்தவொரு முதல்தர ஆட்டங்களிலும் ஜடேஜா விளையாடவில்லை. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் முதல் இன்னிங்ஸில் 1 விக்கெட்டும் 2-வது இன்னிங்ஸில் 7 விக்கெட்டுகளையும் எடுத்தார்.
இந்நிலையில் நாகபுரியில் இன்று நடைபெற்று வரும் முதல் டெஸ்டில் முதல் நாளின் 2-வது பகுதியில் ஸ்மித்தை 37 ரன்களிலும் லபுஷேனை 49 ரன்களிலும் ஆட்டமிழக்கச் செய்தார் ஜடேஜா. ரென்ஷாவை டக் அவுட் செய்தார். இதனால் 84 ரன்களுக்கு 2 விக்கெட்டுகள் என்கிற நிலையில் இருந்து 109 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்தது ஆஸ்திரேலிய அணி. ஆஸ்திரேலிய அணி, 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 144 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது. ஹேண்ட்ஸ்காம்ப் 20, அலெக்ஸ் கேரி 21 ரன்களுடன் விளையாடி வருகிறார்கள்.
இந்த டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலிய அணிக்கு ஜடேஜா பெரிய அச்சுறுத்தலாக இருப்பார் என்பது முதல் நாளிலேயே நிரூபிக்கப்பட்டுள்ளது.