ஆசியக் கோப்பை ஹாக்கி போட்டியில் இந்திய ஆடவர் அணி 16-0 என்ற கோல் கணக்கில் இந்தோனேஷியாவை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.
ஆசியக் கோப்பை ஹாக்கியில் 'ஏ' பிரிவில் இடம்பெற்றுள்ள இந்திய அணி அடுத்து சுற்றுக்குத் தகுதி பெற 15-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற வேண்டிய கட்டாயம் இருந்தது. இந்த நிலையில், இந்தோனேஷியாவை எதிர்கொண்டது இளம் இந்திய அணி. இந்த ஆட்டத்தில் இளம் வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 16 கோல் அடித்தனர். குறிப்பாக கடைசிப் பகுதி ஆட்டத்தில் மட்டும் இந்தியா 6 கோல் அடித்தது.
இதையும் படிக்க | ரித்திகா சிங்கின் இசை விடியோ வெளியீடு
'ஏ' பிரிவில் இந்தியாவும் பாகிஸ்தானும் தலா 4 புள்ளிகளைப் பெற்றன. எனினும் கூடுதலாக 1 கோல் அடித்த வித்தியாசத்தில் இந்திய அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது. இதன்மூலம், பாகிஸ்தான் அணி ஆசியக் கோப்பை போட்டியிலிருந்து வெளியேறியது மட்டுமில்லாமல், உலகக் கோப்பைக்கான வாய்ப்பையும் இழந்தது. இதில் முதல் மூன்று இடங்களைப் பிடிக்கும் அணிகள் மட்டுமே உலகக் கோப்பை ஹாக்கி போட்டிக்குத் தகுதி பெறும்.
உலகக் கோப்பை இந்தியாவில் நடைபெறுவதால், இந்திய அணி அதில் விளையாடவுள்ளது. இதன் காரணமாக இளம் வீரர்கள் ஆசியக் கோப்பை போட்டியில் விளையாடி அனுபவத்தைப் பெற வேண்டும் என ஹாக்கி இந்தியா அணியைத் தேர்வு செய்து அனுப்பியது.
இந்தோனேஷியாவுக்கு எதிரான இந்த ஆட்டத்தில் அதிகபட்சமாக டிப்சன் டிர்கி 5 கோல் அடித்தார். சுதேவ் பெலிமக்கா 3 கோல் அடித்தார்.