இந்திய அணியில் ஆல்ரவுண்டராகவே நான் விளையாடுவேன் என ஹார்திக் பாண்டியா கூறியுள்ளார்.
டி20 உலகக் கோப்பைப் போட்டியில் பங்கேற்ற இந்திய வீரர் ஹார்திக் பாண்டியா, நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரிலிருந்து நீக்கப்பட்டார். தென்னாப்பிரிக்காவுக்கும் செல்லவில்லை. ஐபிஎல் 2021 போட்டியில் மும்பை அணியில் விளையாடிய பாண்டியா, காயம் காரணமாக ஒரு ஓவர் கூட வீசவில்லை. டி20 உலகக் கோப்பைப் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராகப் பந்து வீசாததால் விமர்சனங்களுக்கு ஆளானார். பிறகு நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு எதிரான ஆட்டங்களில் பந்துவீசினாலும் ஒரு விக்கெட்டும் அவர் எடுக்கவில்லை.
பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் பேட்டிங் செய்தபோது தோள்பட்டையில் பாண்டியாவுக்குக் காயம் ஏற்பட்டது. இதையடுத்துக் காயத்துக்குச் சிகிச்சை எடுத்து வருகிறார்.
இந்நிலையில் கிரிக்கெட் பத்திரிகையாளர் போரியா மஸும்தாருக்கு அளித்த பேட்டியில் பாண்டியா கூறியதாவது:
இந்திய அணியில் ஆல்ரவுண்டராக விளையாடுவதே என் திட்டம். அதற்காகத்தான் நான் தயாராகி வருகிறேன். அது சரியாக அமையாவிட்டால் எனக்குத் தெரியாது. ஆனால் என் பயிற்சி, என் உழைப்பு எல்லாமே ஆல்ரவுண்டராக விளையாடுவதை முன்வைத்துத்தான் இருக்கும். ஆமதாபாத் ஐபிஎல் அணி கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளேன். ஒரு முன்னுதாரணமாக இருக்க விரும்புகிறேன். அணி விரும்பும் சூழலை உருவாக்கித் தருவேன். நல்ல மனநிலையில், நல்ல சூழலில் இருப்பது போல வீரர்கள் உணர வேண்டும். எல்லோரும் செளகரியமாக உணரும்போது அவர்களுடைய திறமை என்னவென்பதை அறிவார்கள் என்றார்.