ஐபிஎல் 2022 தொடரில் புதிதாக ஆமதாபாத், லக்னௌ நகர அணிகள் இடம் பெற வாய்ப்புள்ளதாக பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
உலகின் பணக்கார விளையாட்டுகளில் ஒன்றாகக் கருதப்படும் இந்தியன் ப்ரீமியா் லீக் கிரிக்கெட் போட்டியில் தற்போது சென்னை, மும்பை, கொல்கத்தா, டில்லி, ஹைதராபாத், ஜெய்ப்பூா், பஞ்சாப், பெங்களூரு உள்ளிட்ட 8 அணிகள் இடம் பெற்றுள்ளன. வரும் ஐபிஎல் 2022 தொடரில் மொத்தம் 10 அணிகள் இடம் பெறும் என பிசிசிஐ ஏற்கெனவே அறிவித்திருந்தது.
இதற்கான விண்ணப்பிக்கும் நடைமுறை வரும் 25-ஆம் தேதி நடைபெறும் எனத் தெரிகிறது. 20-ஆம் தேதியே கடைசி நாள் என அறிவிக்கப்பட்ட நிலையில் மேலும் சில நாள்கள் அவகாசத்தை பிசிசிஐ பல்வேறு தரப்பு கோரிக்கைகளுக்கு ஏற்ப நீட்டித்துள்ளது.
தற்போது ஆமதாபாத், லக்னௌ, கட்டாக், குவஹாட்டி, ராஞ்சி, தா்மசாலா, உள்ளிட்ட 6 நகர அணிகள் விண்ணப்பித்துள்ளன. ஆண்டுக்கு மொத்த விற்றுமுதல் ரூ.3000 கோடிக்கு மேல் உள்ள கூட்டமைப்புகள், நிறுவனங்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். இந்த அணிகள் விண்ணப்பிக்கும் நடைமுறையால் குறைந்தபட்சம் ரூ.10,000 கோடி வரை வருவாய் கிடைக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது. அதிகத் தொகைக்கு விண்ணப்பிக்கும் அணிகள் தொடரில் இடம் பெறலாம்.
ஆமதாபாத், லக்னௌ உள்ளிட்ட நகர அணிகள் வரும் ஐபிஎல் தொடரில் இடம் பெற அதிக வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.