தன்னால் மகனுக்கு கரோனா பாதிப்பு எதுவும் வந்துவிடக் கூடாது என்பதற்காக வேறு வீட்டில் தங்கி வருகிறார் தமிழக வீரர் வாஷிங்டனின் தந்தை சுந்தர்.
இங்கிலாந்தில் 5 டெஸ்டுகள் மற்றும் நியூசிலாந்துக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கான இறுதிச்சுற்று ஆகிய போட்டிகளில் கலந்துகொள்வதற்காக இங்கிலாந்துக்குச் செல்கிறது இந்திய அணி. இந்த அணியில் தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் இடம்பெற்றுள்ளார்.
வாஷிங்டனின் தந்தை சுந்தர், வருமான வரித் துறையில் பணியாற்றி வருகிறார். வாரத்தில் இரண்டு, மூன்று நாள்கள் அலுவலகத்துக்கு அவர் செல்ல வேண்டும். இதனால் தன்னால் மகனுக்கு கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு வந்துவிடக் கூடாது, அதனால் அவர் இங்கிலாந்து தொடரில் கலந்துகொள்வதில் சிக்கல் வரக்கூடாது என்பதற்காக வேறொரு வீட்டில் தங்கியிருந்து அலுவலகம் சென்று வருகிறார் சுந்தர்,
இதுபற்றி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழுக்கு சுந்தர் கூறியதாவது:
ஐபிஎல் போட்டியிலிருந்து வாஷிங்டன் திரும்பியதிலிருந்து நான் வேறொரு வீட்டில் தங்கி வருகிறேன். என்னுடைய மனைவியும் மகளும் வாஷிங்டனுடன் தங்கி வருகிறார்கள். அவர்கள் எங்கும் வெளியே செல்வதில்லை. விடியோ அழைப்புகள் வழியாகவே வாஷிங்டனுடன் பேசி வருகிறேன். ஒரு வாரத்தில் சில நாள்களுக்கு நான் அலுவலகம் செல்லவேண்டும். என்னால் அவனுக்கு கரோனா தொற்று பாதிப்பு வந்துவிடக்கூடாது. இங்கிலாந்திலும் லார்ட்ஸ் மைதானத்திலும் விளையாட வேண்டும் என்பது வாஷிங்டனின் கனவு. எக்காரணத்துக்காகவும் இந்த வாய்ப்பை தவறக்கூடாது என நினைக்கிறான் என்று கூறியுள்ளார்.