டி20 உலகக் கோப்பைப் போட்டியின்போது முழு உடற்தகுதியுடன் இருக்க வேண்டும் என்பதற்காக ஆல்ரவுண்டர் பாண்டியா, இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்குத் தேர்வாகவில்லை.
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் மற்றும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி இறுதிச்சுற்றுக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது.
விராட் கோலி தலைமையிலான இந்திய அணியில் ஜடேஜா, ஷமி, விஹாரி ஆகியோர் மீண்டும் தேர்வாகியுள்ளார்கள். ஹார்திக் பாண்டியா, குல்தீப் யாதவ் ஆகியோருக்கு இடமில்லை. மேலும் வேகப்பந்து வீச்சாளர்களான புவனேஷ்வர் குமார், நடராஜன் ஆகியோரும் இந்திய அணியில் இடம்பெறவில்லை.
சமீபகாலமாக காயங்களால் அவதிப்பட்டதால் புவனேஸ்வர் குமாருக்கு இந்திய டெஸ்ட் அணியில் இடம் கிடைக்கவில்லை.
ஜூன் 18 முதல் 22 வரை நியூசிலாந்துக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதிச்சுற்றில் விளையாடுகிறது இந்திய அணி. இதன்பிறகு இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர், ஆகஸ்ட் 4-ல் தொடங்குகிறது.
இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் இடம்பெறுவார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பாண்டியா தேர்வாகாமல் போனது பலருக்கும் ஏமாற்றமாக உள்ளது.
ஐபிஎல் போட்டியின்போது பாண்டியாவுக்குத் தோள்பட்டையில் லேசான காயம் ஏற்பட்டது. இதனால் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடிய ஏழு ஆட்டங்களிலும் அவர் பந்துவீசவில்லை. இங்கிலாந்துக்கு எதிரான கடைசி ஒருநாள் ஆட்டத்தில் 9 ஓவர்கள் வீசினார்.
இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு அடுத்து டி20 உலகக் கோப்பையில் இந்திய அணி விளையாடுகிறது. அப்போட்டியில் பந்துவீசும் அளவுக்கு முழு உடற்தகுதியுடன் இருக்க வேண்டும் என்பதற்காக இங்கிலாந்துக்குத் தொடருக்கு பாண்டியாவைத் தேர்வு செய்யவில்லை எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.