உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதிச்சுற்று ஆட்டம் செளதாம்ப்டனில் நடைபெறவுள்ளதாக பிசிசிஐ தலைவர் செளரவ் கங்குலி தகவல் தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து இந்திய அணிக்கு எதிராக 4 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியுள்ளது. டெஸ்ட் தொடரை 3-1 எனக் கைப்பற்றியுள்ள இந்திய அணி, ஜூன் மாதம் இங்கிலாந்தில் நடைபெறவுள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதிச்சுற்றுக்கும் தகுதி பெற்றுள்ளது. நியூசிலாந்துடன் இந்திய அணி மோதவுள்ளது.
இந்நிலையில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதிச்சுற்று ஆட்டம் லார்ட்ஸில் நடைபெறுவதற்குப் பதிலாக செளதாம்ப்டனில் நடைபெறும் என பிசிசிஐ தலைவர் செளரவ் கங்குலி தெரிவித்துள்ளார். ஒரு பேட்டியில் அவர் கூறியதாவது:
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதிச்சுற்று ஆட்டம் செளதாம்ப்டனில் நடைபெறவுள்ளது. இது முன்பே முடிவு செய்யப்பட்டு விட்டது. அந்த மைதானத்துக்குள்ளேயே தங்கும் விடுதி உள்ளது. அதனால் கரோனா பாதுகாப்பு வளையத்தைக் கையாள்வது சுலபமாக இருக்கும். இந்தக் காரணங்களால் தான் கடந்த வருடம் கிரிக்கெட் ஆட்டங்கள் இங்கிலாந்தில் மீண்டும் தொடங்கியபோது பல டெஸ்ட் ஆட்டங்கள் செளதாம்ப்டன் மற்றும் மான்செஸ்டரில் நடைபெற்றது என்றார்.