ஆடவர் ஹாக்கியில் இந்திய - ஜெர்மனி அணிகள் மோதிய 2-ஆவது ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் செவ்வாய்க்கிழமை டிரா ஆனது.
முதல் ஆட்டத்தில் வெற்றி பெற்ற இந்தியா, 4 ஆட்டங்கள் கொண்ட தொடரில் தற்போது 1-0 என முன்னிலை வகிக்கிறது.
ஜெர்மனிக்கு எதிராக செவ்வாய்க்கிழமை நடைபெற்ற 2-ஆவது ஆட்டத்தில் தொடக்கம் முதலே இந்திய அணி ஆக்ரோஷமாக ஆடியது. ஆட்டம் தொடங்கிய சில நிமிடங்களிலேயே இந்திய வீரர் ஜர்மன்பிரீத் சிங் கோலடித்து அணியை முன்னிலை பெறச் செய்தார். தொடர்ந்து நடைபெற்ற ஆட்டத்தில் ஜெர்மனியும் சற்று அதிரடி காட்ட, முதல்பாதி முடியவிருக்கும் நிலையில் அந்த அணிக்கு கோல் கிடைத்தது. இதனால் முதல் பாதி ஆட்டம் 1-1 என்ற நிலையில் இருந்தது. பின்னர் நடைபெற்ற 2-ஆவது பாதியில் இரு அணிகளுக்குமே கோல் வாய்ப்பு கிடைக்காததால், ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் சமனில் முடிந்தது. அடுத்த ஆட்டம் வியாழக்கிழமை நடைபெறுகிறது.