தென் ஆப்பிரிக்காவுடனான முதல் டெஸ்ட் ஆட்டத்தின் முதல் நாள் ஆட்டநேர முடிவில் பாகிஸ்தான் அணி 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 33 ரன்கள் எடுத்துள்ளது.
பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கிடையிலான முதல் டெஸ்ட் ஆட்டம் கராச்சியில் இன்று (செவ்வாய்க்கிழமை) தொடங்கியது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க கேப்டன் குயின்டன் டி காக் முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தார்.
பாகிஸ்தானின் சிறப்பான பந்துவீச்சால் தென் ஆப்பிரிக்க பேட்ஸ்மேன்கள் திணறினர். தொடக்க ஆட்டக்காரர் டீன் எல்கர் மட்டும் அதிகபட்சமாக அரைசதம் அடித்து 58 ரன்கள் எடுத்தார்.
மற்ற பேட்ஸ்மேன்கள் சோபிக்கத் தவறியதால் தென் ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்ஸில் 220 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
பாகிஸ்தான் தரப்பில் யாசிர் ஷா 3 விக்கெட்டுகளையும், நௌமன் அலி மற்றும் ஷஹீன் அப்ரிடி தலா 2 விக்கெட்டுகளையும், ஹசன் அலி 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.
இதையடுத்து, பாகிஸ்தான் அணி தனது முதல் இன்னிங்ஸைத் தொடங்கியது. ககிசோ ரபாடா தனது சிறப்பான பந்துவீச்சால் தொடக்க ஆட்டக்காரர்கள் இம்ரான் பட் மற்றும் ஆபித் அலி ஆகியோரை முறையே 9 மற்றும் 4 ரன்களுக்கு ஆட்டமிழக்கச் செய்தார்.
தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் பாபர் அசாமை (7 ரன்கள்) கேசவ் மகாராஜும் நைட் வாட்ச்மேனாக களமிறக்கப்பட்ட ஷஹீன் அப்ரிடியை நோர்க்கியாவும் வீழ்த்தினர்.
இதன்மூலம், அந்த அணி 27 ரன்களுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்து திணறியது. எனினும், அசார் அலி மற்றும் ஃபவாத் அலாம் அடுத்த 10 பந்துகளில் மேற்கொண்டு விக்கெட் விழாமல் பார்த்துக் கொண்டனர். முதல் நாள் ஆட்டநேர முடிவில் பாகிஸ்தான் அணி 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 33 ரன்கள் எடுத்துள்ளது.
அசார் அலி 5 ரன்களுடனும், ஃபவால் அலாம் 5 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் உள்ளனர். பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்ஸில் இன்னும் 187 ரன்கள் பின்தங்கியுள்ளது.