இங்கிலாந்துடனான முதல் டெஸ்ட் ஆட்டத்தின் முதல் இன்னிங்ஸில் இந்திய கேப்டன் விராட் கோலி முதல் பந்திலேயே ஆட்டமிழந்து ஏமாற்றமளித்துள்ளார்.
இங்கிலாந்து, இந்தியா அணிகளுக்கிடையிலான முதல் டெஸ்ட் ஆட்டம் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதல் பேட்டிங் செய்த இங்கிலாந்து 183 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன்பிறகு, ரோஹித் சர்மா மற்றும் கேஎல் ராகுல் இந்தியாவுக்கு சிறப்பான தொடக்கத்தைத் தந்தனர்.
இரண்டாம் நாள் உணவு இடைவேளைக்கு சற்று முன்பு ரோஹித் சர்மா 36 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். ரோஹித் விக்கெட்டுடன் உணவு இடைவேளை எடுக்கப்பட்டது.
முதல் விக்கெட்டுக்கு ரோஹித், ராகுல் இணை 97 ரன்கள் சேர்த்தது.
இதையும் படிக்க | இந்தியாவுக்கு சிறப்பான தொடக்கம்: உணவு இடைவேளையில் 97/1
உணவு இடைவேளைக்குப் பிறகு ராகுலுடன் சேத்தேஷ்வர் புஜாரா இணைந்தார். சிறிது நேரம் மட்டும் களத்திலிருந்த புஜாரா 4 ரன்களுக்கு ஜேம்ஸ் ஆண்டர்சன் பந்தில் ஜோஸ் பட்லரிடம் கேட்ச் ஆனார்.
தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் விராட் கோலி முதல் பந்திலேயே ஆண்டர்சன் பந்தில் ஆட்டமிழந்தார்.
இதனால், இந்திய அணி சற்று நெருக்கடி நிலைக்குத் தள்ளப்பட்டது. ராகுலுடன் இணைந்து துணை கேப்டன் அஜின்க்யா ரஹானே இந்திய அணியை மீட்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 5 ரன்கள் எடுத்த நிலையில் அவர் ரன் அவுட் ஆனார்.
சற்று முன்பு வரை இந்திய அணி 112 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து விளையாடி வருகிறது.
ராகுல் அரைசதம் அடித்து 52 ரன்களுடன் விளையாடி வருகிறார்.