இங்கிலாந்துடனான முதல் டெஸ்ட் ஆட்டத்தின் முதல் இன்னிங்ஸில் இந்திய கேப்டன் விராட் கோலி முதல் பந்திலேயே ஜேம்ஸ் ஆண்டர்சனிடம் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்துள்ளார்.
பேட்டிங்கில் ஜாம்பவனாகத் திகழ்பவர் மற்றும் பந்துவீச்சில் ஜாம்பவனாகத் திகழ்பவர் இடையிலான போட்டிக்கு கிரிக்கெட்டில் எப்போதுமே பெரிய வரவேற்பு இருக்கும். அந்த வகையில் இந்தியா, இங்கிலாந்து என்றால் கோலி, ஆண்டர்சன் இடையிலான போட்டி மீது மிகுந்த எதிர்பார்ப்பு இருக்கும்.
இந்திய அணி 2014-இல் இங்கிலாந்துக்குப் பயணம் மேற்கொண்டபோது கோலிக்கு அது மோசமான டெஸ்ட் தொடராக அமைந்தது. அப்போது ஆண்டர்சனிடம் 50 பந்துகளை எதிர்கொண்ட கோலி 19 ரன்கள் மட்டுமே எடுத்து 4 முறை ஆட்டமிழந்தார்.
இதையும் படிக்க | 'கோல்டன் டக்' ஆன கோலி: முதல் பந்திலேயே ஆண்டர்சனிடம் வீழ்ந்தார்
இதனால், 2018-இல் கோலி, ஆண்டர்சன் இடையிலான போட்டி குறித்து டெஸ்ட் தொடர் தொடங்குவதற்கு முன்பே பெரிதளவில் பேசப்பட்டது. ஆனால், அந்தப் பயணத்தின்போது கோலி ஆண்டர்சனிடம் 270 பந்துகளை எதிர்கொண்டு 114 ரன்கள் எடுத்தார். ஒருமுறைகூட அவர் பந்தில் ஆட்டமிழக்கவில்லை.
இதனால், இம்முறையும் இருவருக்கிடையிலான போட்டி குறித்து தொடர் தொடங்குவதற்கு முன்பு எதிர்பார்ப்புகள் கிளம்பியது. ஆனால், முதல் இன்னிங்ஸ் பேட்டிங்கில் கோலி முதல் பந்திலேயே ரன் ஏதும் எடுக்காமல் ஆண்டர்சனிடம் வீழ்ந்தார்.
இதன்மூலம், இந்தத் தொடரில் இனி வரவிருக்கும் ஆட்டங்களில் இருவருக்கிடையிலான போட்டி குறித்த எதிர்பார்ப்புகள் மேலும் உச்சத்தைத் தொட்டுள்ளது.
கடந்த பயணத்தின்போது கோலியை ஒருமுறைகூட வீழ்த்த முடியாமல் போனதையடுத்து, இம்முறை முதல் பந்திலேயே அவரை வீழ்த்தியதால் ஆண்டர்சன் மகிழ்ச்சியில் குதித்துக் கொண்டாடினார்.